இளையராஜா அவர்களின் ‘ராஜா என்றும் ராஜாதான்’ கொழும்பு இசை நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டவுடனேயே ஆசன முன்பதிவு செய்திருந்தேன். பவதாரணியின் மறைவு தந்த அதிர்ச்சியால் நிகழ்ச்சி பின்போடப்பட்டபோது, ‘என்னுடைய கடைசி ஆசைகூட இப்படி நிராசையானதே’ என்ற ஏக்கம் ஏற்பட்டாலும் அதுபற்றிப் பேசுவதுகூட குற்ற உணர்வைத் தருவதாக இருந்தது எனக்கு. புதிய திகதி அறிவிக்கப்பட்டு, நிகழ்ச்சிக்கு முந்தைய நாள்வரைகூட குறைந்த கட்டணமிடப்பட்ட ஆசனங்கள் தன்னும் முழுமையாக விற்கப்படாமல் இருந்ததைப் பார்த்தபோது, இந்த நிகழ்வு பொருளாதார ரீதியில் தோல்வியடையும் என்றே தோன்றியது.
எப்படியோ, எங்களைப் போன்ற ‘கொஞ்சம் பழசுகள்’ வந்து ஏனோதானோவென்று தலையை ஆட்டிவிட்டுப் போகும் என்று நான் எதிர்பார்த்திருக்க, நிகழ்ச்சி ஆரம்பிக்குந்தறுவாயில் அரங்கு நிறைந்திருந்ததைப் பார்த்ததும் ஆச்சரியமாகவிருந்தது. ஏராளமான, இளையவர்கள் அங்கு கூடியிருந்தது என்னுள் கேள்விகளை எழுப்பியது. உண்மையில், இவர்கள் இளையராஜா இசை அபிமானிகளா அல்லது ஏதாவதொரு நிகழ்வுக்கு வரக்கூடிய மகிழ்வு விரும்பிகளா? ஹார்மோனியத்தை ஒருவர் கொண்டுவந்து வைத்தபோதே கூட்டத்தில் கரவொலிகளுடன் மகிழ்ச்சிச் சலசலப்பையும் காண முடிந்தபோது ‘இவர்களைச் சாமானியர்களாக நினைத்துவிடக்கூடாதோ’ என்ற எண்ணம் ஏற்பட்டது. நிகழ்ச்சியை வழக்கம்போல ஜனனியுடன் ஆரம்பித்து பவதாரிணியின் ‘மயில்போல பொண்ணு’ வை குழுப் பாடலாகத் தந்தார் இளையராஜா. பவதாரிணியின் படத்தை திரையில் காண்பித்தபோது எழுந்த ‘ஆ’ வென்ற ஒலியில் ஒரு ஏக்கம் தொனித்தது. நெப்போலியன் அவர்கள் ஒரு நிமிட மெளன அஞ்சலிக்கு அழைப்பு விடுத்தபோது அனைவரும் எழுந்திருக்க, சுமார் 4000 பேர் இருந்திருக்கக்கூடிய அரங்கம் முழு அமைதியில் ஆழ்ந்தது. இவையெல்லாம் இது சாதாரண கூட்டமல்ல, இளையராஜா அவர்களின் இசையுடன் மட்டுமின்றி அவரின் தனிப்பட்ட சோகத்திலும் பங்குபற்றும் உணர்வுள்ள கூட்டமென்பதை உணர்த்தியது. என்னுடைய கணிப்பில் நான் முழுமையாகத் தோற்றுப்போனது, பாடல்களின் ஆரம்ப இசை ஒலிக்க ஆரம்பித்ததுமே பாடலை இனங்கண்டுகொண்டு ‘ஓ’ என்று அரங்கம் அதிர இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோதுதான். அமைதியான பாடல்களை இரசித்த அதே கூட்டம் டப்பாங்குத்துக்கு ஆண், பெண் என்ற வித்தியாசமின்றி ஆடத் தொடங்கியது. மனோ, ஸ்வேதா, மதுபாலகிருஷ்ணன், அனன்யா, போன்றவர்களுக்கும் நல்ல வரவேற்பிருந்ததைச் சொல்லவேண்டும். பொதுவான விதிப்படியன்றி, VVIP கள்கூட கைதட்டி இரசித்தது நான் பார்த்த ஒரு அதிசயம்!
எஸ். ஜானகி, கே.ஜே. ஜேசுதாஸ், சித்திரா போன்றவர்களை இதே அரங்கில் பல தசாப்தங்களுக்கு முன்னர் நான் பார்த்திருந்தேன். எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களை காலிமுகத்திடலில் பார்த்திருக்கிறேன். பாடல்களின் அசல் ஒலிப்பதிவுகளைக் கேட்டுக்கேட்டு மனதில் பதிந்துவிட்டதால், இசைக் கச்சேரிகளை என்னால் முழுமையாக இரசிக்கமுடிவதில்லை – குறைகளும் தவறுகளுமே அதிகம் கேட்கும். இருப்பினும், கடைசியாக நான் பார்க்க விரும்பியது இளையராஜா அவர்களுடைய இசை நிகழ்ச்சிதான் – ‘இந்த வரலாற்று நிகழ்வில் பங்கெடுத்துக்கொண்டேன்’ என்ற நினைவை நான் இறுதிவரை சுமக்க வேண்டுமென்பதற்காக.
இசை தந்த அதிர்வுகளுடன், அந்த அரங்கமும் சூழ்நிலையும தந்த உணர்வலைகள் தொண்டைக்குள் ஏதோ அடைத்துக்கொண்டதுபோன்ற கணங்களை ஏற்படுத்தாமல் விடவில்லை. இருப்பினும் சினிமா இசைக் கச்சேரி ஒன்றுக்கு நான் போவதற்கான ஏதுநிலை இனி இல்லை.
இளையராஜா இசை என்பது பல சந்தர்ப்பங்களில் ஒலியமைப்பு ரீதியாக பிரமாண்டமானது. சுமார் 30 கலைஞர்களுடனும், பாடகர்களுடனும் அதனை ஒப்பேற்றுவது இலகுவல்ல. ஒரு வயலினும் ஒரு (ச்)செலோவும் இல்லை என்றில்லாமல் இருந்தன! 4 திறமையான கீபோட் கலைஞர்கள் இட்டு நிரப்பினார்கள். சிறப்பான samplers பயன்படுத்தியதால் மோசமான ஒலியாக இருக்கவில்லை என்று சொல்லலாம். மேலும், அந்தப் பிரமாண்டமான அரங்கில் அனைவரும் இரசிக்கும் வண்ணம் ஒலிக்கலவை செய்வதும்கூட கடினமானது. 80dBக்கு மேலே ஒலித்ததால் சில குறைகள் தெரியாமல் செய்யப்பட்டது.
இளையராஜா இசைக்கு இடுப்பைக் காட்டும் அழகிகள் தேவையில்லை – வரவில்லை. ‘எல்லோரும் ஒரு ‘ஓ’ போடுங்கள்’, அல்லது ‘எங்கே உங்கள் பலத்த கரகோஷம்’ என்று கேட்டு வாங்கும் அறிவிப்பு அபத்தங்கள் ஒன்றும் வரவில்லை. அதுபோலவே, கண்ணில் அடிக்கும் வர்ண மின்விளக்குகளும் தேவையில்லை – இருந்தது. ஒருவேளை, அவரின் இசை இரசிகரில்லாத யாரோ அந்த முடிவை எடுத்திருக்கலாம்!
எல்லாவற்றுக்கும் மேலாக, இசை நிகழ்வுகளில் வழக்கமாக நாங்கள் பார்த்த இளையராஜாவை காணமுடியவில்லையோ என்று என்னுள் ஒரு உணர்வு. அந்தக் குரலில் ஒரு தொய்வு இருந்தது. பேச்சில் உற்சாகம் குறைந்திருந்தது. நுணுக்கமான உணர்வுகளை எமக்கு இசையால் தந்தவர், சராசரி மனித உணர்வுகளை அதிகம் வெளிக்காட்டாமல் அவற்றைக் கடந்த நிலையில் பணியாற்றக்கூடியவர் – இழப்பிலிருந்து மீண்டுவர அவருக்கு இன்னும் அதிக கால அவகாசம் கொடுத்திருக்கவேண்டுமோ என்று தோன்றுகிறது. வியாபார நிர்ப்பந்தங்களில் அவரும் கட்டுண்டிருக்கலாமோ என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது. இது வயதால் வந்த தொய்வு நிலையல்ல என்பது மூன்று மணிநேரம், ஒரு கணமேனும் ஓய்வின்றி நின்றநிலையில் நிகழ்ச்சி செய்யக்கூடிய அவரைப் பார்த்தால் யாருக்கும் புரியும். இளையராஜா போன்ற அபரிமிதமான, அமானுஷ்ய சக்திகொண்ட இன்னுமொரு படைப்பாளி இந்த உலகமுள்ளவரை இனி வரப்போவதில்லை. அடுத்த தலைமுறைக்கு செயற்கை நுண்ணறிவே இசையை வழங்கும். எனவே இசைஞானியின் உடல் ஆரோக்கியம் இன்னும் பல ஆண்டுகள் தொடர வேண்டும் என்ற எனது விருப்பத்தில் சுயநலமிருந்தாலும் அது எம்மைப்போன்ற பலரின் மன ஆரோக்கியத்துக்கு அவசியமானது என்பதை அவரைச் சுற்றி இருக்கிறவர்கள் புரிந்துகொண்டு, அதனைக் கடமையாகக் கொள்வார்களாக.