‘Born with a silver spoon in mouth’. வசதியும் செல்வாக்கும் மிக்க குடும்பத்தில் பிறந்தவர்களை ‘வெள்ளிக் கரண்டியை வாயில் வைத்தவாறே பிறந்தவர்’ என்று இவ்வாறு ஆங்கிலத்தில் அடைமொழியிட்டுக் கூறுவது வழக்கம்.
யுத்தம் சின்னாபின்னமாக்கிய குடும்பங்களில் யாருமற்று அநாதரவாக்கப்பட்ட குழந்தைகளை வளர்க்கவென தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களால் 1990களில் செஞ்சோலை என்ற குழந்தைகள் காப்பகம் ஆரம்பிக்கப்பட்டதை ஈழப்போராட்டத்துடன் ஏதோவொரு வகையில் தொடர்புபட்ட அனைவரும் அறிவர். ஒரு கனிவான தகப்பன்போல அக்குழந்தைகளுடன் அவர் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் அவ்வப்போது வெளிவந்திருந்தன. கெளதமரை அவரின் பெற்றோர் உலகின் துன்பங்கள் எதையும் அறியாமல் வளர்க்கத் தலைப்பட்டதுபோல, பெற்றோரற்ற இக்குழந்தைகள் எந்தக்கவலையையும் அனுபவிக்கக்கூடாது என்பதற்காக மிகுந்த கவனத்துடன் பராமரிக்கவேண்டி, பிரபாகரனின் நேரடிக் கட்டுப்பாட்டில் செஞ்சோலை வைக்கப்பட்டிருந்ததாக முன்னர் சொல்லப்பட்டிருந்தது சிலருக்குத் தெரிந்திருக்கலாம். தமிழீழத்தை வெற்றிகொண்டதன் பின்னர் அத்தகைய பிள்ளைகளை வளர்ப்பதே அவரது விருப்பம் என்று அவர் கூறியிருந்ததாகவும் அந்நாட்களில் மக்கள் பேசிக்கொண்டதாக ஞாபகம். செஞ்சோலைக் குழந்தைகள் கேட்டு பிரபாகரனால் வழங்கப்படாதது அநேகமாக ஒன்றுமில்லை என்பார்கள். ஆனால் வரித்தொப்பி கேட்டபோதுமட்டும் மறுத்துவிட்டு ‘நீங்கள் எனது பிள்ளைகள்; போராளிகளல்லர்’ என்று சொன்னதாகவும் நினைவு மீட்டுகிறார்கள் சிலர். தனது உயிருக்கு ஆபத்து இருந்த சந்தர்ப்பங்களிலும்கூட ‘பார்க்கவேண்டும்’ என்று பிள்ளைகள் கேட்டால் ஓடி வருபவர் என்பது, எல்லையோர சிங்களக் கிராமங்களில் பெண்கள், குழந்தைகள் என்று பாராது வெட்டியும் சுட்டும் கொல்ல உத்தரவிட்ட ஒரு மனிதனின் நம்பக்கடினமான, மென்மையான ஒரு பக்கமாக இருந்திருக்கிறது.
எது எப்படியிருந்தபோதும், யுத்தம் நடந்த காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் செல்வமும் அதை மிஞ்சிய செல்வாக்கும் மிக்கவர்களாக இந்தக் குழந்தைகள் இருந்திருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.
அன்றைய குழந்தைகள் பின்னர் பெரியவர்களாகி சிலருக்கு அங்கேயே திருமணம் செய்துவைக்கப்பட்டு அவர்களது குழுந்தைகளுடனும் ஏனைய மக்களுடனும் இடம்பெயர்ந்து, அனைவரையும் போல யுத்தத்தின் அனைத்துக் கொடுமைகளையும் அனுபவித்து, சிலர் மடிந்து, பலர் முகாமில் வாழ்ந்து, தடுப்பிலிருந்து விடுதலை பெற்று இன்று பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று வாழ்ந்து வருகிறார்கள். சிலர் மீண்டும் தமது பூர்வீகமான, இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட, செஞ்சோலை கிராமத்துக்கு வந்து வாழத்தலைப்பட்டது 2019 இல்.
யுத்தத்தின்போது இராணுவநோக்கில் தமிழ்ச் சமூகத்தில் வளர்க்கப்பட்ட சந்தேக மனப்பான்மை இன்று எல்லோரையும்போலவே இவர்களையும் பாதித்திருக்கிறது. சமூகமட்டத்தில் புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் அனைவர் மீதும் இருக்கும் பயம்/ சந்தேகம் இவர்கள் மீதும் நிழலாடுவதாகவே தோன்றுகிறது. இவர்களுக்கு உறவுகள், இவர்களுடன் ஒன்றாக இருந்தவர்கள் மட்டும்தான். வயதில் மூத்தவரை ஒருவர் அக்கா என்று அழைத்தால், அவரின் குழந்தைகள் முன்னயவரை சித்தி என்று அழைக்கிறார்கள். போரால் பாதிக்கப்பட்ட அனைவரையும் போலவே சமூக, பொருளாதார, உளநலத் தேவைகள் இவர்களுக்கும் இருந்தபோதும் பெற்றோர், உறவினரை அறியாதவர்கள் என்ற வகையிலும், ஆரம்பத்தில் மிக உயர்வான நிலையில் வைக்கப்பட்டு பின் சமூக, பொருளாதார பாதாளத்தில் தள்ளிவிடப்பட்டவர்கள் என்ற வகையிலும் அன்புக்கும் அரவணைப்புக்கும் அதிகம் ஏங்குபவர்களாக இருக்கிறார்கள். முன்னர் தமது பராமரிப்பாளர்களுடன் முரண்பட்டுக்கொண்டு தண்டனைக்காளானபோது, பிரபாகரனுக்குக் கடிதம் எழுதி வரவழைத்து அவர்களைப் பழிவாங்கியதையிட்டு மனம்வருந்தும் உள்ளங்கள் சில, இன்று பாதிக்கப்பட்ட ஏனைய மக்கள் மீதும் கருணை பாராட்டுபவர்களாக இருப்பது எளிமையான மனித மனங்களின் முதிர்ச்சியடையும் வல்லமையைக் காட்டுகிறது.
நிரந்தரமான, உறுதிப்படுத்தப்பட்ட காணி, வீடு என்பன கிடைக்கப்பெறாதவர்களின் பட்டியலில் இவர்களும் இருக்கிறார்கள். செஞ்சோலைக்கு என்று புலிகள் வாங்கிய காணிக்கு உரித்துடையவர்களாக முன்னர் இருந்தவர்களில் சிலர் வந்து தமது காணியை மீளத் தரும்படி கேட்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பல ஏக்கர்கள் விஸ்தீரணமுள்ள இந்த நிலத்தில்தான் செஞ்சோலைக் குழந்தைகள் ஒடி விளையாடினார்கள்; இங்குதான் இவர்கள் வீட்டுப்பாடங்கள் செய்தார்கள்; அவர்கள் அழுததும், சிரித்ததும், குண்டு வீச்சுகளுக்குப் பயந்து பதுங்கியதும், சிலர் திருமணம் செய்ததும்கூட இங்குதான். அதனால் இங்குதான் அவர்கள் தம்முடன் வளர்ந்த உறவுகளுடன் வாழவும் விரும்புகிறார்கள்.
ஏனெனில் அங்கு அவர்களை ‘அப்பன் பெயர் தெரியாதவர்கள்’ என்று யாரும் ஈனத்தனமாக விளிப்பதில்லை; சாதி, சமய வேற்றுமை-வெறுப்புகள் இல்லை; சீதனக்கொடுமை இல்லை. ஒருவித சமத்துவ சமுதாயமொன்றில் வாழும் இவர்களிடையே கூலி வேலை செய்து ஓரடி வாழ்க்கையில் முன்னேறியவர்கள்கூட மற்றையவர்களுக்காக இரங்கும் சகோதரபாசம் அதிகம் இருப்பது தெரிகிறது.
போராட்டத்தின் பெயரால் சேர்க்கப்பட்ட சொத்துகளில் ஒரு துளியை உதவக்கூடுமானால், இவர்களினதும் இவர்கள் போன்ற இன்னும் ஏராளமானவர்களின் வாழ்க்கையையும் மாற்ற முடியும். தேசியம் பேசி, தேசியத் தலைவர் என்று போற்றி, விடுதலைக்கோசம் முன்வைத்து, கதை எழுதி, கவிதை யும் இயற்றிவிட்டு, இராணுவம் மக்கள் மேல் காட்டும் அன்பைக்கூட இவர்கள்மேல் காட்டாமல் மக்களுக்கும் நாட்டுக்கும் அநியாயம் செய்பவர்கள் ஒருபுறமும், எதிரி என்று சொல்லப்பட்டவர்களுக்கு இரகசியமாக பணிபுரிபவர்கள் இன்னொருபுறமும் இருக்க, சந்தேகத்தின் சந்தையான இன்றைய வடபகுதியில், ‘மாமா’ என்று சொல்லும்போதே கண்கள் பனிக்கும் அவர் வளர்த்த இந்த குழந்தைகளை நாம் நம்பினாலும், அவர்கள் யாரை நம்பலாம் என்பதுமட்டும் விடைகாணமுடியாத கேள்வியாகத் தொக்கி நிற்கிறது.
சமூக செயற்பாட்டாளர்களின் கண்களிலும்கூட அதிகம் தென்படாமல் இருந்துவிட்ட இந்த அவலம், விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்கும் அரசியலுக்கும் அப்பால் மனிதநேயம் உள்ளவர்களின் சமூகக் கடமைகளில் ஒன்றாகிவிட்டது என்பதுவே உண்மை.