தென்னாபிரிக்காவின் பழமையான மொழிகளிலொன்றான சூலு (Zulu) மொழியில் மனிதகுலத்தைக் குறிப்பதான உபுன்டு (Ubuntu) என்ற சொல் உள்ளது. இந்தச் சொல்லுக்கு ஆதி ஆபிரிக்க மக்களின் வாழ்வியலை அடியொற்றியதான, ‘முழு மனிதகுலத்தையும் பகிர்வினூடாக இணைத்தல்’ என்றவாறான தத்துவார்த்த பொருட்கோடலும் உண்டு. ஆங்கிலத்தில் அதற்கு “I am because we are” என்ற கவிதை நயத்துடனான மொழிபெயர்ப்பு தரப்படுகையில் “எம்மால் நான்” என அதனை மொழிபெயர்ப்பின் தவறாகாது எனக் கருதுகிறேன். அதற்குக் காரணமுள்ளது:
ஒரு குடும்பத்தில் உள்ள பிள்ளையை இன்னொரு தாய் எந்தச் சங்கடங்களுமின்றி, கடைத்தெருவுக்கு அனுப்பவும் அந்தப்பிள்ளை வேறொருவீட்டில் உண்டு, உறங்கவும் செய்வது ஆபிரிக்க சமூகங்களில் சாதாரண நிகழ்வுகளாக உள்ளது வியப்பைத் தரலாம் (யுத்தம் எம்மை அலைக்கழிக்குமுன்னர் நெருங்கிய உறவினருக்கிடையில் சிறு பிராயத்தினர் இப்படியாக இருந்த சந்தர்ப்பங்கள் சிலருக்கு நினைவிருக்கக்கூடும்). ஆபிரிக்க சமூகங்கள் மிக ஆழமான சமூகப்பிணைப்பைக் கொண்டவை. நகரப்புறங்களில் இன்று வாழ்வுமுறை பெரிதும் மாறிவிட்டபோதும் கிராமங்களில் அந்த உன்னத ஆதிவாழ்வியலின் தடயங்கள் காணப்படுகின்றன.
இந்தச் சமூகப் பிணைப்பை மையமாகக்கொண்டு யுத்தம், மற்றும் HIV AIDS இனால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைக்கும் நோக்கில் செயற்படும் நிறுவனம் ஒன்று, கிராமத்தின் மத்தியில் பிள்ளைப்பராமரிப்பு விடுதியை அமைத்து அக்கிராமத்து அன்னையருக்கும் தந்தையருக்கும் சகோதரர்களுக்கும் அப்பிள்ளைகளை உறவுகளாக்கிச் செயற்படுவது உன்னதமான சிந்தனை. எமது நாட்டில் அத்தகைய குழந்தைகள் கிராமத்துக்கு வெளியே உயர்ந்த மதில்களுக்குள் அகப்பட்டு அனாதைகளாகவே இருந்துவிடுவது முற்றிலும் முரண்பட்ட நிலை.
வடக்கு, கிழக்கில், பெரும்பாலும் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த சமூகப் பிணைப்புகளை யுத்தம் அறுத்துவிட்டது. எல்லாரும் எல்லாரையும் அறிந்துவைத்திருந்த கிராமிய வாழ்வு, இடப்பெயர்வுகளுடன் மறைந்துவிட்டது. வயது வித்தியாசம், ஆண், பெண் என்ற வேற்றமைகளைக்கூட உணராமல் கிராமங்களில் மகிழ்ச்சியாக ஓடியாடித்திரிந்த வாழ்க்கை இல்லாமற்போனதற்கு அயலவர்கள் மீதான நம்பிக்கையீனம் ஒரு பிரதான காரணி.
இதற்கு விடுதலை இயக்கங்கள் என்று தம்மை அழைத்துக்கொண்டவர்கள் அதிக பங்களிப்புகளைச் செய்திருக்கிறார்கள் என்பதையும் மறுக்கமுடியாது. நாட்டில் யுத்த நிலை இருந்தபோது அடுத்தவீட்டுக்கு புதிதாகக் குடிவந்திருப்பவர் யார் என்று நாம் பார்ப்பதில்லை. அவர்கள் எதேனும் இயக்கத்தின் உளவாளிகளோ அல்லது இராணுவத்துக்குத் தகவல் வழங்குபவரோ என்ற சந்தேகம் எமக்குள் ஆழமாக இருந்தது. யுத்தம் முடிந்து 10 ஆண்டுகளாகின்றபோதிலும்கூட மற்றவர்மட்டிலான இத்தகைய ஆழமான சந்தேகங்கள் எம்முள் இருக்கத்தான் செய்கின்றன.
சிறுவர் துஷ்பிரயோகங்கள் பற்றிய பரவலான செய்திகளால் இன்று பிள்ளைகளை இன்னொரு வீட்டுக்கு விளையாட அனுமதித்துவிட்டு பெற்றோர் மனநிம்மதியுடன் இருக்கும் நிலை காணப்படவில்லை. மாற்றீடாக, தொலைக்காட்சி மற்றும் இணையவழிப் பொழுதுபோக்குகளுள் அகப்பட்டு பெற்றோரின் கண்களுக்கு முன்பாகவே பிள்ளைகள் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகிறார்கள்.
சமூகம் இவ்வாறாக சின்னபின்னப்பட்டுக் கிடக்கையில் சமூகஆர்வலர்களின் கடமை-பொறுப்புகள் எவை என்பது பற்றிய தீர்க்கமான உரையாடல் நடைபெறவேண்டியுள்ளது.
யுத்தத்தால் இழந்த உயிர், கல்வி, உடைமைகளைவிட ஒருதேசமாக நாம் இழந்துவிட்ட அயலான் மட்டிலான நம்பிக்கை மிக அதிகமான பெறுமதிமிக்கது.
இந்த நிலைக்கு ஏதோ வழிகளில் நாமும் காரணமாகிவிட்டோம். பாவங்களைக் கழுவும் பொறுப்பும் எம்மதே.