Society

சிலை உடைப்புகளும் மனித நாகரிகமும்

அண்மைக்காலமாக உலகின் பல நாடுகளில் ஒடுக்குமுறையையும் காலனித்துவத்தையும் பிரதிபலிப்பவர்கள் என்ற காரணத்தினால் அத்தகையவர்களின் சிலைகளை மக்கள் உடைத்துவீழ்த்திவருவதைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இவற்றுக்குப்பின்னால் ஏதாவது அரசியல், சூழ்ச்சிகள் இருக்கக்கூடும். அல்லது ஆட்சியாளர்கள் அவ்வப்போது மக்களின் கோபத்தைத் திசைதிருப்பக் கையாளும் உத்திகளாகக்கூட இருக்கலாம். ஆயினும், இவை வெறுமனே சிலைகளின் உடைப்பு என்பதாக அன்றி ஒரு குறிப்பிட்ட சிந்தனைப்போக்கின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது. இத்தகைய செயல்கள் நாம் ஏற்கனவே பார்த்து அனுபவித்தவைதான். 70களிலும் 80களிலும் யாழ்ப்பாணத்தின் வீதிகளில் அமைக்கப்பட்டிருந்த தலைவர்களினது சிலைகளை கலவரங்களின்போது படையினர் உடைப்பது வழக்கம். காந்தியையும் தமிழ் தலைவர் என்று எண்ணி உடைத்து ஒற்றைக் கம்பியில் தலைகீழாகத் தொங்கவிட்டிருப்பார்கள்.

தமிழ் ஆயுத தரப்பினர் எதிர்த்தரப்பினரின் அடையாளங்களை அழிப்பதை அல்லது சரித்திரத்தை இருட்டடிப்புச் செய்வதை ஒரு வக்கிரமான ஆர்வத்துடன் செய்திருந்ததும் எமது போராட்ட வரலாற்றின் ஒரு பகுதியெனலாம்.

90களில் ஒரு தற்காலிக சண்டை ஓய்வின்போது வவுனியா நகருக்கு வந்திருந்த புலிகளின் குறிபார்த்துச் சுடும் வீரர் ஒருவர் நகரின் மத்தியில் இருக்கும் காலஞ்சென்ற கொப்பேக்கடுவ அவர்களின் சிலையின் தலைக்குச் சுட்டதையும் இச்சிந்தனையின் உச்சபட்ச ‘சாதனையாக’ அரச தரப்பினர் புலிகளின் போராட்ட அடையாளங்களை அழிக்குமுகமாக அவர்களின் மயானங்களை தரைமட்டமாக்கியதும் பிரபாகரனது பதுங்கு குழியை உடைத்து மூடியதும்  நாம் அறிந்ததே.

கலவரத்தில் அழிப்பதைப்போன்று கலவரத்தை உண்டாக்க உடைப்பதும்கூட உண்டு. மற்றையவரின் மத அடையாளங்களை உடைப்பது அத்தகைய சிந்தனையின் ஒரு நீட்சியாக இருக்கிறது. பிறமதம் ஒன்று சிலரால் பின்பற்றப்படுவது தமது மதத்தை அவமதிப்பதாக அல்லது தம்மை சிறுமைப்படுத்துவதாக வேறொரு தரப்பு கருதுவது இத்தகையதே.

யாழ் நூலக எரிப்பும் தமிழர்களின் கல்வி, கலாசார மேலோங்கல் தம்மை சிறுமைப்படுத்தும் என்ற சிங்கள மேலாதிக்க வக்கிர எண்ணத்திலானதாக இருந்திருக்கலாம்.

எமக்கு விருப்பமில்லாத்தை அல்லது அவமானகரமானதாக நாம் கருதுவதை அழிப்பதினூடாக வரலாற்றை அழித்துவிட முடியுமென நினைப்பது மூடத்தனமானதாகும்.

அல்பிரட் .துரையப்பா அவர்கள் மாநகர முதல்வராக இருந்த காலத்தில் நடந்ததாலும் முன்னாள் இலங்கை அமைச்சர் செ. குமாரசூரியர் அவர்கள் திறந்துவைத்ததாலும் இன்று செல்லுபடியாகும் வியாக்கியானங்களுக்கு அமைய தமிழ்த்தேசியவாதியாக இல்லாமலிருந்த ஆனந்த குமாரசுவாமி அவர்களின் சிலை யாழ்ப்பாணத்தில் இப்படி இருக்கிறது.MVIMG_20190831 (Large)

மனித குலத்தின் சரித்திரம் வெற்றி, தோல்விகளாலும் அவமானங்களாலும் நிறைந்ததுதான். மனித குலம் வெற்றிகளைக் குவித்துள்ளது என்று ஒரு வாதத்துக்கு வைத்துக்கொண்டால், அத்தனை வெற்றிகளுக்கும் பின்னால் சொல்லமுடியாத அவமானங்களையும் கொண்டுள்ளது. அவமானங்களை அழித்துவிடுவதாயின் தெருக்கோடியில் உள்ள சிலைகளைமட்டுமன்றி, சீனப் பெருஞ்சுவர், பிரமிட்கள், கோவில்கள், நெடுஞ்சாலைகள், கடைகள், பனைமரம், தென்னைமரம் என்று அனைத்தையும் அழித்துவிட்டு முழு மனிதகுலமும் ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்துகொள்ளவேண்டியிருக்கும். ஏனெனில், முதலாளித்துவ வளரச்சியின் பேரில் நடக்கும் சுரண்டலும் சோசலிச புரட்சியின் பேரில் சிந்திய குருதியும் எம் அனைவரினதும் அவமானமாக மனித நாகரிகமுள்ள காலம்வரை எம்முடன் இருக்கும்.

விரும்பியதை மட்டும் எடுத்துக்கொள்வதால் சரித்திரம் மாறிவிடாது. நடந்தவை நடந்தவைதான். அவற்றுடன் வாழும் விதத்தில் மனங்களை வளர்த்துக்கொள்ளவும் எதிர்கால சந்ததியினருக்கு எமது படிப்பினைகளையும் நல்ல  சிந்தனைகளையும் விட்டுச்செல்ல முயற்சிப்பதுவுமே நாம் செய்யக்கூடிய நல்லவைகள்.

பின்னூட்டமொன்றை இடுக