அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைக்குச் செல்லும் பலர், ‘அங்கு அவர்கள் எங்களை அவமரியாதை செய்வார்கள்; அறிமுகம் இல்லாவிட்டால் கவனிக்க மாட்டார்கள்; மட்டமாக நடத்துவார்கள்; திட்டுவார்கள்; தர்க்கரீதியற்ற நடைமுறைகளை வைத்திருப்பார்கள்’ என்ற இன்னோரன்ன விமரிசனங்களை வைக்கிறார்கள். எல்லா இடங்களிலும்போல அங்கும் கடமையுணர்வற்று வேலை செய்கிறவர்கள் இருப்பதால் இப்படியான குற்றச்சாட்டுகளில் உண்மையும் இருக்கத்தான் செய்யும். சுகாதாரத் துறையிலும், இலங்கையில் மட்டுமன்றி, உலக அளவில்கூட மாபியாக்கள் தொழிற்படுகின்றன என்பது புரிந்துகொள்ளச் சிரமமானதில்லை. எனக்கும் எனது நண்பர்கள், நண்பிகளுக்கும் சில அனுபவங்கள் இருக்கின்றன.
அண்மையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெறவேண்டிய நிலை வந்தபோது இந்த விடயங்கள் பற்றி அதிகம் அவதானிக்கத் தொடங்கினதன் பின்னூட்டம் இது.
நாங்கள் வருடக்கணக்காக விடுமுறை இல்லாமல் வேலை செய்ய, ‘இந்த வெள்ளைக்காரர்கள்’ வேலைக்கு வந்து 2 வாரங்களில் ஓய்வு வேண்டுமென்று ஓடுகிறார்களே என்று நாங்கள் கிண்டலடித்தபோது, அதற்குப்பின்னால் இருந்த மனோவியல் தத்துவம் புரிந்திருக்கவில்லை. எங்களுடைய கலாசாரத்தில் அது இல்லை! எங்களில் பலர் தொழிலையும், வாழ்க்கையையும் ஒன்றாகக் கருதியதும், மனோவியற் புரிதல் இன்மையும் ‘எங்களுக்குத் தெரியும்’ என்ற மமதையில் மற்றவர்களை மட்டந்தட்ட மூலகாரணங்களானது.
நான் மற்றவர்களுடன் பொறுமையின்றி, மிக மோசமாக நடந்துகொண்ட சந்தர்ப்பங்கள், அதிக மனவழுத்தத்தைத் தந்த சம்பவங்கள் வாழ்வில் இடம்பெற்றிருந்த காலங்களிலேயே நடந்திருந்தன. (இயல்பாக நான் மோசமானவனில்லை என்பதை இது நிரூபிக்கின்றது 😉) வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்திருந்த மக்களுக்கான வேலைத் திட்டங்களில் நான் ஈடுபட்டிருந்த காலங்களும் இதில் முக்கியமானவை. அதிக மனவழுத்தம் தரக்கூடிய பணிகளில் இருப்பவர்கள் தம்மை ஆசுவாசப் படுத்திக்கொள்ளும்பொருட்டு விடுமுறை எடுத்துக்கொள்வது அவசியம் என்பது இந்த வேலைத் திட்டங்கள் முடிவுற்று பல வருடங்கள் கடந்தபிற்பாடு சுய ஆய்வுகளினூடாக எனக்குப் புரிந்தது. அண்மையில் வைத்தியசாலையில் இருந்தபோது அதிக அக்கறையுடன் மனிதர்களை அவதானிக்க இந்த அனுபவம் என்னைத் தூண்டியது.
பலவிதமான மனப்பாங்குகள், வேதனைகள், பிரச்சினைகளுடன் வருபவர்களை ஒரே சூழ்நிலைக்குள் இருந்துகொண்டு நித்தமும் கையாளும் நிலை நிச்சயமாக சாதாரணமானதில்லை. இது அவர்களின் மனப்பாங்கிலும், ஆரோக்கியத்திலும் அவர்களையும் அறியாமல் ஆதிக்கம் செலுத்தி அழித்துவிடும் என்பது என் அனுமானம் மட்டுமல்ல; அனுபவமும்கூட. சில வருடங்களுக்கு முன், எனது நண்பர் ஒருவர் மரணிக்குந்தறுவாயில் இருக்க, சிற்றூழியர் ஒருவர், பாடல் ஒலித்த கைபேசியை வாயில் கெளவியபடி வந்து அவருக்கு saline மாற்றியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மேலை நாடுகளில் வைத்தியரே நோயாளியின் பாதணிகளைக் கழற்றிய சம்பவங்களை அறிந்திருக்கிறேன். அப்படியிருக்க, சில காலங்களுக்கு முன்னர், கிளிநொச்சி வைத்தியச்சாலை அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவேளை, தீண்டத்தகாதவனைப் பார்ப்பதுபோல பின்னால் கைகளைக் கட்டியபடி வைத்தியர் எட்டத்தில் நின்றிருக்க, அழுக்கான கட்டிலில் படுக்கவைக்கப்பட்ட எனக்கு சிற்றூழியர் ஒருவர் ECG கருவியைப் பொருத்தியபோது, இலங்கை வைத்தியத்துறையே கேவலமானதாகத் தோன்றியது. ஆனால், அண்மைக்கால அவதானிப்புகளிலிருந்து, வைத்தியர்களும் தாதியரும் தமது கல்வியறிவு, அனுபவத்தூடாக, தம்மை நடுநிலைப்படுத்திக்கொள்ள ஓரளவுக்கு முயற்சிக்கிறார்கள் என்று புரிந்தாலும் அதில் ஒரு செயற்கைத் தன்மை இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
வைத்தியர்(கள்), நோயாளிகளின் நலன்கள் தொடர்பில் நோயாளிகளிடம் மென்மையாகப் பேசி, வெற்றுக் கைகளால் அழுக்கான உடல் பாகங்களைத் தொட்டு சேவையைச் செய்தார்கள் என்றாலும் மற்றைய வைத்தியர்கள், தாதியரைக் துளைத்தெடுத்த கடுமை எனக்கே சற்றுச் சங்கடமாக இருந்தது. நடுத்தரவயதுப் பெண்ணான சிற்றூழியர் ஒருவர் தனது வேலை, வயது போன்ற காரணிகளையும் மீறி நோயாளி ஒருவருடன் கிண்டலடித்து விடுதியைக் கலகலப்பாக்க முயன்றார். அந்த கலகலப்பு உண்மையானது என்றாலும் அவரின் முயற்சி பொய்யானது என்றே எனக்குத் தோன்றியது. மருந்து கொடுக்க நோயாளிகளைத் தம்மிடம் வரவழைக்கிறார்களே என்று ஆதங்கப்பட்டாலும், நோயாளி நடக்க முடியாமல் சிரமப்பட்டபோது சிங்களவரான பெண் தாதி ஒருவர் எட்டி விரைந்து அவரிடம் சென்றதை அவதானிக்க முடிந்தது (எந்த அறிமுகத்துடனும் போகாத அந்த நோயாளி நான் தான்!).
சில இளம் பெண் தாதியர் – அநேகமாக சிங்களவர் – பகல் இரவாக வேலை செய்கிறார்கள். சிலரின் கண்களில் களைப்பும், சிலவற்றுக்குப் பின்னால் ஆழ்ந்த சோகமும் இருப்பதாகப்பட்டது எனக்கு. இளம் வயதில் நித்திரை விழித்து வேலை செய்த அனுபவம் எனக்கும் இருப்பதால் இது மனதை வருத்தியது என்பதும் உண்மை.
அரச சார்பற்ற நிறுவனங்களில் பணிபுரிந்தபோது வகுப்புகள், கலந்துரையாடல்கள் போன்றவற்றுக்காக தென்னிலங்கை நட்சத்திர விடுதிகளுக்கு அழைத்தபோது, ‘இவ்வளவு செலவு செய்கிறார்களே, இந்தப்பணத்தை எங்கள் மக்களுக்குத் தரலாமே’ என்ற ஒரு வகை குற்ற உணர்ச்சி ஆரம்பத்தில் எனக்கு ஏற்பட்டிருந்தது. மேற்கத்தேயராயிருந்த எங்கள் மேலதிகாரிகள் எங்களுக்குச் சொல்லாமலே ஒரு சிறிய ஓய்வை எங்களுக்குத் தந்திருக்கிறார்களென்பதும், அது நல்ல மாற்றத்தை மனதுக்கும் உடலுக்கும் தந்திருக்கிறது என்பதும் புரிய நீண்டகாலம் எடுத்தது.
தென்னிலங்கையுடன் ஒப்பிடும்போது வடக்கு மனதை இலகுபடுத்த உதவக்கூடியது அல்ல. அதனாலேயோ என்னவோ, சிங்களவரான வைத்தியத்துறை ஊழியர்கள் ஒப்பீட்டளவில், மென்மையானவர்களாக இருக்கிறார்கள் என்பது எனது அவதானிப்பாக இருக்கிறது. இந்த விடயத்தை மனித நேயத்துடன் கையாள வைத்தியத்துறை சார்ந்த, அதிக மனவழுத்தத்தைச் சுமக்கிறவர்கள் வருடத்தில் ஒருமுறை 2-3 நாட்களுக்காவது தென்னிலங்கைப் பிரதேசங்களில் பயிற்சி/ கருத்தரங்கு போன்ற செயற்பாடுகள் கலந்த ஒரு ஓய்வுக்கு அழைத்துச் செல்லப்படுவது, பொதுமக்களுக்கான சேவையை மேம்படுத்த உதவும் என்பது எனது நம்பிக்கை. 2-3 வைத்தியசாலைகளைத் தேர்ந்தெடுத்து, அதன் ஊழியர்களை குழுக்களாக இந்த ஓய்வுக்கு அனுப்பும் நடைமுறையின் விளைவு-வெளியீட்டை ஒரு கணிப்பீட்டினூடாக அளக்க முடியலாம்.
விடுமுறை எடுப்பது எமது கலாசாரத்தில் இல்லை. அத்துடன், இன்று இருக்கும் பொருளாதார நெருக்கடியில் சொந்தச் செலவில் இதனைச் செய்ய அநேகர் முன்வர மாட்டார்கள், முன்வரவும் முடியாது. இதற்கு தனியார் நிறுவனங்களின் CSR funds, புலம்பெயர்ந்த தேசத்து கோடீஸ்வரர்கள் உதவ முடியும்.
இப்படி ஒரு விடயம் ஏற்கனவே கலந்துரையாடப்பட்டுள்ளதா என்று எனக்குத் தெரியாது. ஆனால் சமூகத்தின் நன்மைகருதி இத்தகைய உரையாடலொன்று இடம்பெற்றால் நல்லதென்று தோன்றுகிறது எனக்கு.